மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த தவெக நிர்வாகி கைது

0
7

ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் தவெக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட மணிமங்கலம் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் தியாகு (32). இவர் மணிமங்கலம் அண்ணா நகர் பகுதி தவெக கிளை கழக தலைவராக உள்ளார். திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், வீட்டின் அருகில் வசித்து வரும் கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக மறைமுகமாக செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கவனித்த மாணவி அதிர்ச்சியடைந்து உடனடியாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, மாணவியை வீடியோ எடுத்ததை தியாகு ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண்களின் தனியுரிமையை மீறும் வகையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.