ஊரப்பாக்கம்: லாரி – லோடு ஆட்டோ விபத்து; ஓட்டுநர் படுகாயம்

0
2

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் சிக்னல் அருகே சிறிய லோடு ஆட்டோ மீது லாரி மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் நோக்கி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, நேற்று ஊரப்பாக்கம் சிக்னல் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிக்னலில் நின்று கொண்டிருந்த சிறிய லோடு ஆட்டோ மீது லாரி மோதியது.

இந்த விபத்தில் லோடு ஆட்டோவின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்ததுடன், அதனை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்தார். விபத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், லாரியின் பிரேக் கம்பி திடீரென அறுந்ததால் ஓட்டுநரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், விபத்திற்கான சரியான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் ஊரப்பாக்கம் சிக்னல் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் விரைந்து சென்று சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.