செங்கல்பட்டில் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளின் மெத்தனத்தால், 5000 நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வில்லியம்பாக்கம் சுற்றியுள்ள ஆத்தூர், வடகால், திம்மாவரம், சாஸ்தரம்பாக்கம், வெண்பாக்கம் கொளத்தூர், கொங்கனாஞ்சேரி ஆகிய கிராமத்தில் பயிரிடப்படும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை வில்லியம்பாக்கம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்க்கு கொண்டு வந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதங்களாகியும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் சுமார் 5 ஆயிரம் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். வட்டிக்கு பணம் வாங்கியும் நகையை அடகு கடையில் வைத்து விவசாயம் செய்து அறுவடை செய்த நெல் மூட்டைகள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வில்லியம்பாக்கம் பகுதியில் கொட்டி வைக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க அடுக்கடுக்கான புகார்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மழை பெய்தால் வில்லியம்பாக்கம் பகுதியில் பாதுகாப்பாற்ற நிலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் மூட்டைகள் வீணாகிவிடும் என்பதால், தேக்கமடைந்த 5 ஆயிரம் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
