செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாமக நிர்வாகி நாகராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாமக நகர செயலாளரான இவர், செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த இவரை, நேற்றுமுன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த நாகராஜ், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த போலீசார், 2 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான சூர்யா மற்றும் விஜயகுமார் ஆகிய 2 பேர் காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் விரட்டிச்சென்று காவலர்கள் அவர்களை கைது செய்தனர்.
போலீசார் விரட்டிச்சென்றபோது, இருசக்கரவாகனத்தில் இருந்து இருவரும் தவறி விழுந்தனர். இதனால், இருவருக்கும் கால்முறிவு ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், எஞ்சியுள்ள இருவரையும் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.