மாமல்லபுரம் சுற்றுலா விடுதியில் ரூ.20 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்

0
4

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக (TTDC) கடற்கரை விடுதியில், சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ரூ.20 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த கடற்கரை விடுதி, கடந்த 1976ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சுமார் 44.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் தற்போது 72 குளிர்சாதன வசதி கொண்ட தங்கும் அறைகள், உணவகம், கூட்டரங்கம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

சென்னைக்கு அருகில் அமைந்துள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த விடுதியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், விடுதியின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, புதிய தங்கும் அறைகள், மேம்பட்ட வசதிகளுடன் கூடிய கட்டடங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் சேவைகள் வழங்கும் வகையில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பு கடந்த 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்த பிறகு, மாமல்லபுரம் வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தரமான தங்கும் வசதிகள் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மேம்பாட்டு திட்டம், மாமல்லபுரத்தை சர்வதேச சுற்றுலா மையமாக மேலும் வலுப்படுத்துவதோடு, உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.