ஹார்முஸ் மீண்டும் மூடல்: அமெரிக்க முற்றுகைக்கு எதிராக ஈரான் நடவடிக்கை

0
7

மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் அரசு ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க கடற்படைகள் தொடர்ந்து ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டு வருவது இந்த முடிவுக்கு காரணமாகும்.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கியதையடுத்து, ஈரான் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டது. மேற்காசியாவில் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் இலக்குகளுக்கு தாக்குதல் நடத்தியது சூழ்நிலையை தீவிரப்படுத்தியது.

போர் தீவிரமடைந்ததால், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாக உள்ள ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், எரிபொருள் தட்டுப்பாடும் உருவானது. 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலை நிறுத்துமாறு பல நாடுகள் அழுத்தம் கொடுத்தன.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு வார தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தார். பின்னர், இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா-ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. லெபனான் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் பேசப்பட்டாலும், 21 மணி நேர பேச்சுவார்த்தை முடிவின்றி நிறைவடைந்தது.

இதேவேளை, லெபானான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலை குறைக்க அமெரிக்கா நடுவராக பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் விளைவாக 10 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வணிக கப்பல்களுக்கு ஹார்முஸ் வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்ததால், ஈரான் மீண்டும் ஜலசந்தியை மூடியுள்ளது. அமெரிக்கா தனது நடவடிக்கையை நிறுத்தும் வரை இந்த தடுப்பு நீடிக்கும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.