வண்டலூர் ஹேமக் நிறுவனத்தில் தொடர் கொள்ளை!

0
1

வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில், கஞ்சா போதை கும்பல் ஆயுதங்களுடன் புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதி தொழிலதிபர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும், ஊழியர்களை மிரட்டியும் அரங்கேறும் இந்த அராஜகம் குறித்து கிளாம்பாக்கம் போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொளப்பாக்கம் பகுதியில் கடந்த 16 ஆண்டுகளாக ‘ஹேமக்’ (HAMMOCK) என்ற தனியார் நிறுவனம் ஊஞ்சல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது தொழில் நஷ்டம் காரணமாக உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அந்த இடம் மூலப்பொருட்கள் வைக்கும் குடோனாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்ட மர்ம கும்பல், பட்டப்பகலிலேயே அத்துமீறி நுழைந்து விலை உயர்ந்த ஸ்டீல் மற்றும் இரும்புப் பொருட்களைத் திருடிச் செல்கின்றனர். இதனைத் தட்டிக்கேட்கும் ஊழியர்களைக் கஞ்சா போதையில் இருக்கும் அந்த கும்பல் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறப்படுகிறது.

“நெற்றியில் சந்தனம், விபூதி பூசிக்கொண்டு வரும் இந்த நபர்கள், கத்தியுடன் வெட்ட வருகின்றனர். உயிருக்கு பயந்துதான் வேலை செய்ய வேண்டியுள்ளது” என நிறுவனத்தின் உரிமையாளர் கரன் பட் மற்றும் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 5 முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் இருந்தும் இதுவரை ஒரு சி.எஸ்.ஆர் (CSR) கூட வழங்கப்படவில்லை என்றும், முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட தரப்பு குற்றம் சாட்டுகிறது.

காவல்துறையின் இந்த மெத்தனப்போக்கு சமூக விரோதிகளுக்குப் பச்சைக்கொடி காட்டுவது போல் அமைந்துள்ளதாகப் அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். பட்டப்பகலில் ஆயுதங்களுடன் வலம் வரும் இந்தக் கஞ்சா கும்பலை ஒடுக்கவும், தொழில் நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் தாம்பரம் காவல் ஆணையர் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் கோரிக்கை வலுத்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், வண்டலூர் பகுதியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலையும் அபாயம் உள்ளதாகத் தொழிலதிபர்கள் எச்சரித்துள்ளனர்.