ஒரு ராணி எறும்பின் விலை ரூ.21 ஆயிரம் – கடத்திய சீனர் – இது எதுக்கு தெரியுமா?

0
4

தங்கம், வைரம் அல்லது போதைப்பொருள் கடத்தப்படுவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சுமார் 2,200 உயிருள்ள ராணி எறும்புகளைக் கடத்த முயன்ற ஒருவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வினோதச் சம்பவம் கென்யாவில் அரங்கேறியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஜாங் கெகுன் (Zhang Kequn) என்ற பயணி, கென்யாவின் நைரோபி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சீனாவுக்குப் புறப்படத் தயாராக இருந்தார். அப்போது அவரது உடைமைகளைச் சோதனை செய்த பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது பையில் இருந்த விசேஷக் குழாய்கள் (Test tubes) மற்றும் டிஷ்யூ பேப்பர் சுருள்களுக்குள் ஆயிரக்கணக்கான உயிருள்ள எறும்புகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் ‘எக்ஸோடிக் பெட்’ எனப்படும் அரிய வகை உயிரினங்களை வளர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ‘குயின் கார்டன்’ (Queen Garden Ants) எனப்படும் இந்த வகை எறும்புகள் மிகவும் மதிப்புமிக்கவை.

ஒரு ராணி எறும்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 21,000 வரை ($220) விற்பனை செய்யப்படுகிறது. ஜாங் கெகுன் கடத்த முயன்ற 2,200 எறும்புகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 4.6 கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எறும்புகளைச் சிறிய கண்ணாடி கூண்டுகளில் (Formicariums) வைத்து வளர்த்து, அவற்றின் காலனி உருவாக்கம் மற்றும் சமூகப் படிநிலைகளை வேடிக்கை பார்ப்பது ஒரு விலையுயர்ந்த பொழுதுபோக்காகப் பரவி வருகிறது.

ஆரம்பத்தில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஜாங் கெகுன், பின்னர் ஆதாரங்களுடன் பிடிபட்டதால் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கென்ய நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், சுமார் 8,000 டாலர் (சுமார் ரூ. 6.7 லட்சம்) அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கும் எறும்புகளை இவ்வளவு பெரிய அளவில் கடத்துவது உயிரியல் பாதுகாப்புக்கு (Bio-security) பெரும் அச்சுறுத்தல் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்தத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.