அச்சிறுபாக்கம் அருகே உள்ள அகிலி ஊராட்சியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இவ்விழாவில் அகிலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
கிராம மக்களின் ஒத்துழைப்புடன் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. அனைத்து பணிகளும் நிறைவடைந்ததை அடுத்து கும்பாபிஷேக விழாவிற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 27ஆம் தேதி தொடங்கின.
விழாவின் ஒரு பகுதியாக கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் கோவில் கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் காலை 10.15 மணிக்கு மூலவர் முத்துமாரியம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
