Home செங்கல்பட்டு குடிநீரில் கழிவுநீர் கலப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

0

செங்கல்பட்டு மாவட்டம் மணப்பாக்கம் நகர்ப்புற பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகத்தில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். மேலும், மாசடைந்த குடிநீரை பயன்படுத்துவதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று ஒன்றுகூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version