Home செங்கல்பட்டு உடைந்த குடிநீர் குழாய்: அழகேசன் நகரில் 10 நாட்களாக தண்ணீர் வீணாகும் அவலம்

உடைந்த குடிநீர் குழாய்: அழகேசன் நகரில் 10 நாட்களாக தண்ணீர் வீணாகும் அவலம்

0

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட அழகேசன் நகரில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வீணாகி வருவதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அழகேசன் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு பாலாற்று கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகம் அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தொடர்ந்து சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது. மேலும், குழாய் உடைந்த பகுதியில் பள்ளம் உருவாகி அதில் குப்பைகள் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியை கடந்து செல்ல சிரமப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பள்ளி மாணவிகள் மற்றும் முதியவர்கள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

கோடை வெயில் காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், குடிநீர் வீணாகுவது வேதனை அளிப்பதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உடைப்பு ஏற்பட்டது குறித்து பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைத்து, சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version