தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் நட்சத்திர நடிகர் அஜித் குமார் முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார். பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்றுவிட்டு, வாக்களிப்பதற்காகவே நேற்று சென்னை திரும்பிய அவர், அதிகாலையிலேயே வரிசையில் வந்து நின்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அஜித் வாக்குச் சாவடிக்கு வந்துள்ள தகவலறிந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், அவரைப் பார்ப்பதற்கும் செல்பி எடுப்பதற்கும் அங்குப் பெருமளவில் திரண்டனர். இதனால் திருவான்மியூர் வாக்குச் சாவடி வளாகத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் “ஏகே.. ஏகே..” (AK) என உரக்கக் கூச்சலிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தியதால், அந்த அதீத சத்தத்தைத் தாங்க முடியாமல் நடிகர் அஜித் தனது இரு காதுகளையும் கைகளால் சிறிது நேரம் மூடிக்கொண்டார். பின்னர் காவல்துறையினரின் உதவியுடன் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையில், வாக்குச் சாவடியில் அஜித்திடம் செய்தியாளர் ஒருவர் “தமிழகத்தில் மாற்றம் தேவையா?” எனக் கேட்டதற்கு, அவர் “No Need” என்று கூறியதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கமளித்துள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “நடிகர் அஜித் ‘No Need to Change’ (மாற்றம் தேவையில்லை) என்று அரசியல் ரீதியாக எதுவும் கூறவில்லை. அவருக்குப் பேட்டி அளிக்க விருப்பமில்லை என்பதைத் தெரிவிக்கவே ‘No Need’ (வேண்டாம்) எனக் கூறினார். அவரது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன,” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
actor-ajith-voting-2026-election-chennai-thiruvanmiyur-controversy





