திருப்பதியில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தரிசனம்!

0
2

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கே (VVIP) உரிய பாரம்பரிய மரியாதைகளுடன் அவருக்குத் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேற்று மாலை திருமலைக்கு வருகை தந்த துணை குடியரசுத் தலைவரை, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர். இன்று அதிகாலை விஐபி பிரேக் தரிசனம் (VIP Break Darshan) மூலம் கோயிலுக்குச் சென்ற அவருக்கு, கோயில் முன்வாசலில் மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே வழங்கப்படக்கூடிய ‘இஸ்திகாபால்’ வரவேற்பு அளிக்கப்பட்டது.

தரிசனத்தின் போது, ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகர், ஐதீக ஹாரத்தி முறைப்படி இறைவனின் திருவடி முதல் உச்சி வரை கற்பூர ஆரத்தி சமர்ப்பித்தார். அப்போது, ஏழுமலையானின் திருமேனியில் உள்ள ஒவ்வொரு பாகத்தின் சிறப்புகள் மற்றும் அங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருவாபரணங்களின் மகத்துவங்கள் குறித்துத் துணை குடியரசுத் தலைவருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தரிசனம் முடிந்து ரங்கநாயகர் மண்டபத்திற்கு வந்த அவருக்கு, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆசி வழங்கினர்.

தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அவருக்குத் தீர்த்த பிரசாதங்கள் மற்றும் ஏழுமலையானின் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. துணை குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, அவர் தங்கியிருந்த மாளிகை முதல் கோயில் வரை அனைத்துப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.