மாமல்லபுரம் அருகே திருப்போரூர் பிரணவமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாமல்லபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு 1 கிலோ கஞ்சாவுடன் இருவரை கைது செய்தனர்.
மாமல்லபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு, திருப்போரூர் பிரணவமலை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னை ஆவடியை சேர்ந்த தமிழ்வாணன் (37) மற்றும் திருப்போரூர் அடுத்த வெண்பேடு பகுதியை சேர்ந்த குமார் (45) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஒரு கிலோ அளவிலான கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





