திருக்கழுக்குன்றம் அருகே ஆபத்தான சாலை வளைவு: இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை

0
12

திருக்கழுக்குன்றம் – ஈச்சங்கரணை செல்லும் பிரதான சாலையில் உள்ள ஆபத்தான வளைவு பகுதியில் இரும்பு தடுப்புகள் இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அசம்பாவிதம் நடைபெறும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருக்கழுக்குன்றம் அருகே உள்ள இந்த சாலை வழியாக நடுவக்கரை, நெரும்பூர், வாழத்தோப்பு, லட்டூர், நல்லாத்தூர், ஆயப்பாக்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த சாலையை முக்கிய போக்குவரத்து வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈச்சங்கரணையிலிருந்து கருமாரப்பாக்கம் செல்லும் பிரதான சாலையில் உள்ள ஆபத்தான வளைவு பகுதியில் பாதுகாப்பு இரும்பு தடுப்புகள் அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அந்த பகுதி மிகவும் ஆபத்தானதாக மாறி வருகிறது.

மேலும், நடுவக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இருந்து தினமும் ஏராளமான கனரக லாரிகள் இயக்கப்படுகின்றன. அதிக வேகத்தில் செல்லும் இந்த லாரிகள் மற்றும் பிற வாகனங்கள் வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் உயிரிழப்பு உள்ளிட்ட பெரிய விபத்துகள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, சாலை வளைவு பகுதியில் புதிய இரும்பு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.