தண்டலம் மதுபான கிளப்பை அகற்ற கோரி மனு

0
5

தண்டலம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கிளப்பை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் திருப்போரூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

திருப்போரூர் அருகே ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான மனமகிழ் மன்றத்தில் தினமும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மதுபான கிளப், தண்டலம் ஊராட்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலும், அருகிலுள்ள தனியார் பள்ளியிலிருந்து 200 மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

இதனால், அப்பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், மதுபான கிளப்பிற்கு வரும் நபர்கள் தங்களது வாகனங்களை ஓ.எம்.ஆர் சாலையோரத்தில் நிறுத்தி விட்டு செல்வதால், பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், மதுபான கிளப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தண்டலம் கிராம மக்கள், திருப்போரூர் வட்டாட்சியர் ஆறுமுகத்திடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தேவையான பரிந்துரைகளை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.