சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆட்டோ முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது.
கிழக்கு தாம்பரம் வினோபா நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் (50). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு தனது ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிவதை பார்த்து சசிகுமார் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினரை அழைத்து உதவி கோரிய அவர், அனைவரும் சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீ வேகமாக பரவியதால் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆட்டோவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
