கழிப்பிடத்தில் பச்சிளம் குழந்தையை வீசிவிட்டு சென்ற கொடூரம்

0
6

சென்னை ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணை எதிரே அமைந்துள்ள சென்னை மாநகராட்சி கழிப்பிடத்தில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரவு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள், கழிப்பிடத்தின் உள்ளிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டதை தொடர்ந்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு, போலீசாரின் வாகனத்தில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் குழந்தைக்கு மேல்சிகிச்சை தேவைப்பட்டதால், 108 ஆம்புலன்ஸ் மூலம் வென்ட்டிலேட்டர் வசதியுடன் பாதுகாப்பாக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தைக்கு தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை கழிப்பிடத்தில் கைவிட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.