சிங்கப்பெருமாள் கோவில் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பழமையான அம்மன் கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் பழமையான ஓசூரம்மன் கோவில் அமைந்துள்ளது. வழக்கம்போல் கடந்த ஜூன் 7ஆம் தேதி மாலை 7 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டு பூட்டப்பட்டது.
அடுத்த நாள் காலை கோவிலை திறக்க வந்த பூசாரி, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக பாலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டு, கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் வழிபாட்டிற்காக பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





