சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஒரு வருடத்திற்கு நாட்டு மக்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்கம் இறக்குமதியால் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் தங்கம் இறக்குமதி குறித்து ஒரு முக்கியமான கருத்தைப் பகிர்ந்து கொண்டார். நடுத்தரக் குடும்பங்கள் தங்கம் வாங்குவதை ஒரு முதலீடாகப் பார்க்கும் சூழலில், பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியா உலகிலேயே தங்கம் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது குறித்துப் பிரதமர் தனது உரையில் விளக்கியதாவது: தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பல நாடுகள் நிதிச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன.
தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால், இந்தியாவிலிருந்து பெருமளவிலான அந்நியச் செலாவணி வெளியேறுகிறது. இது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஒரு சவாலாக அமைகிறது. எனவே, நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இந்திய கலாச்சாரத்தில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படுகிறது. பிரதமரின் இந்த வேண்டுகோள், மக்கள் தங்களது முதலீட்டு முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. தங்கத்திற்குப் பதிலாகத் டிஜிட்டல் முதலீடுகள் அல்லது அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இது பார்க்கப்படுகிறது.
தங்கம் இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை (Current Account Deficit) ஓரளவிற்குக் கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், திருமணக் காலங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் மக்கள் தங்கம் வாங்குவதை எந்த அளவிற்குத் தவிர்ப்பார்கள் என்பது கேள்விக்குறியே. பிரதமரின் இந்தப் பேச்சு வரும் நாட்களில் நகை வியாபாரிகள் மற்றும் சந்தை நிலவரங்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
“தேசிய நலனே முதன்மையானது” எனத் தனது உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதார வலிமையை அதிகரிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார்.
