பரனூர் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: MLFF திட்டத்திற்கு எதிர்ப்பு

0
1

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் புதிய MLFF (Multi Lane Free Flow) திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த சுமார் 20 ஆண்டுகளாக 140-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அந்த சுங்கச்சாவடியில் விரைவில் MLFF எனப்படும் ‘மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ’ திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பல ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து MLFF திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “பல ஆண்டுகளாக இந்த சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறோம். புதிய தொழில்நுட்ப திட்டத்தால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எங்களது நிலையை கருத்தில் கொண்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.