வாடகை பிரச்சனை, செல்போன் டவரில் ஏறி மிரட்டல்

0
3

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட நீலாங்கரை பகுதியில், மனநலம் குன்றிய மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீலாங்கரையைச் சேர்ந்த உஷா (40), தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகனுடன் வசித்து வருகிறார். கடந்த எட்டு மாதங்களாக வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான உஷா, நேற்று (ஜூன் 8) அக்கரை பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உஷாவை பாதுகாப்பாக கீழே இறக்கி மீட்டனர். பின்னர் அவருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக உஷா, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.