செங்கல்பட்டு மாவட்டம் நீலமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2025–2026 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் பயின்ற 24 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சிறப்பான சாதனையை பாராட்டும் வகையில், வசந்தம் தன்னார்வலர் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவர்களின் கல்விச் சாதனையை பாராட்டிய அவர், எதிர்காலத்திலும் இதேபோன்ற முயற்சிகளின் மூலம் உயர்கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தார்.
பள்ளியின் 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கப் பரிசு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





