Home செங்கல்பட்டு முகுந்தகிரி கோவிலில் கொள்ளை முயற்சி: கருவறை கதவு உடைப்பு

முகுந்தகிரி கோவிலில் கொள்ளை முயற்சி: கருவறை கதவு உடைப்பு

0

சித்தாமூர் அருகே உள்ள முகுந்தகிரி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான கோதண்ட ராமர் ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருவறை கதவை உடைக்க முயன்ற மர்ம நபர்கள், முயற்சி தோல்வியடைந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

முகுந்தகிரி கிராமத்தில் உள்ள இந்த பழமையான பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவில் நடை சாத்தப்பட்டது. பின்னர் நேற்று காலை பூசாரி கோவிலை திறக்க வந்தபோது, கோவிலின் வெளிக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து அவர் உடனடியாக கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் கடப்பாரை போன்ற கருவிகளை பயன்படுத்தி கருவறை கதவை உடைக்க முயற்சி செய்திருப்பது தெரியவந்தது. ஆனால் கருவறை கதவை உடைக்க முடியாததால், அவர்கள் எதையும் கொள்ளையடிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சித்தாமூர் போலீசார் உடனடியாக கோவிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version