கொளத்தூர் ரெட்டேரி மேம்பாலம் அருகே பறந்து வந்த மாஞ்சா நூலில் சிக்கி இரு கண்கள் மற்றும் கையில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாதவரம் பகுதியைச் சேர்ந்த மாலா (38) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது கணவர் முருகன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு 17 மற்றும் 15 வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை தனது தோழி கவிதாவுடன் மொபட்டில் கோயம்பேட்டில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கொளத்தூர் ரெட்டேரி மேம்பாலம் அருகே சென்றபோது, அங்கு பறந்து வந்த மாஞ்சா நூல் திடீரென அவரது முகத்தில் சிக்கியது.
இதில் மாலாவின் இரு கண்கள் மற்றும் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக தோழி கவிதா மற்றும் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து மாலா அளித்த புகாரின் பேரில் ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி விட்ட நபர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மாஞ்சா நூல் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.





