மல்லியங்கரணை சாலையில் சாய்ந்த மின்கம்பம்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

0
3

உத்திரமேரூர் அருகே மல்லியங்கரணை கிராமத்திற்கு செல்லும் சாலையோரத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர் அடுத்த மல்லியங்கரணை கிராமத்திற்கு செல்லும் சாலையோரங்களில் பல மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்கள் வழியாக கடல்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விவசாய நிலத்திற்கு அருகே அமைந்துள்ள மின்கம்பம் ஒன்று கடந்த ஆறு மாதங்களாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

குறிப்பாக மழைக்காலங்களில் மின்கம்பம் மேலும் வலுவிழந்து விவசாய நிலங்கள் மீது விழும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக நிலங்களில் பணிபுரியும் விவசாயிகள் அச்சத்துடன் தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, பெரிய விபத்து ஏற்படும் முன்பே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சாய்ந்துள்ள மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.