தமிழகத்தின் அடுத்த தலைமுறை நகர வளர்ச்சி திட்டமாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ‘சர்வதேச நகரம்’ (Global City) அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மாநிலத்தின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த நகர வளர்ச்சி முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் Tamil Nadu Industrial Development Corporation (TIDCO) மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலகத் தரத்திலான தனியார் நிறுவனங்கள் இந்த திட்ட வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளன.
மதுராந்தகத்தில் உருவாகும் இந்த நவீன நகரம், “15-Minute City Concept” அடிப்படையில் வடிவமைக்கப்படுகிறது. அதாவது, மக்கள் தங்களது குடியிருப்பிலிருந்து மிகக் குறுகிய தூரத்திலேயே வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெறும் வகையில் நகரம் அமைக்கப்படும்.
இந்த சர்வதேச நகரத்தில் அதிநவீன குடியிருப்புகள், உலகத்தரம் வாய்ந்த பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மையங்கள், பின்டெக் மற்றும் நிதி நிறுவனங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவுநீர் மறுசுழற்சி மற்றும் பசுமை வளாகங்கள் போன்ற சுற்றுச்சூழல் நட்பு கட்டமைப்புகளும் இடம்பெறும்.
இத்திட்டத்திற்காக அத்திமனம், ஜானகிபுரம், கள்ளன்பிரான்புரம், படாளம், பாளையனூர் மற்றும் புலிப்பாரக்கோவில் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 1,945 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
சென்னையின் வளர்ச்சி நெரிசலை குறைக்கும் வகையில் தெற்குப் பகுதியில் புதிய பொருளாதார மையத்தை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் அமையவுள்ளது. திட்டம் நிறைவேறினால், மதுராந்தகம் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழில் மற்றும் வணிக நகரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




