மதுராந்தகம் அருகே கருங்குழி ரயில்வே மேம்பாலம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் (27) நேற்று இரவு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாக வந்த கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் தலை, கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த குபேந்திரன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தாக்குதல் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முன்விரோதம் மற்றும் உள்ளூர் தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இவ்வாறு அரிவாள் தாக்குதல் நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.





