மத்தியப் பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதியன்று நடந்த அதிர்ச்சிகரமான சாலை விபத்தின் பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களுக்காக ‘ரீல்ஸ்’ (Reels) எடுக்க முயன்றது மூன்று இளைஞர்களின் உயிரைப் பறித்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த அன்று, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஐந்து நண்பர்கள் அதிவேகமாகச் சென்றுள்ளனர். விபத்துக்குள்ளான முதல் பைக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர். இரண்டு பைக்குகளும் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றும், சாலையில் இருந்த போக்குவரத்து நெரிசலுக்கு இடையே ஆபத்தான முறையில் புகுந்து சென்றும் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியில், பைக்கை ஓட்டிச் சென்ற ஒரு இளைஞர் கையில் துப்பாக்கியை வைத்திருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இது அவர்களின் பொறுப்பற்ற பயணத்தை உறுதிப்படுத்துகிறது. அந்தக் காணொளியின் முடிவில், இளைஞர்கள் ஒரு லாரியை முந்திச் செல்ல முயல்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாகச் செங்கற்கள் ஏற்றிச் சென்ற டிராலி ஒன்று முன்னால் தோன்றியுள்ளது.
நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் அந்த டிராலியின் பின்புறத்தில் பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த உப்லஷ் கோல், அம்ரிஷ் கோல் மற்றும் ஹேம்ராஜ் கோல் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்களின் பின்னால் பைக்கில் வந்து இந்தச் சம்பவத்தைப் படம்பிடித்த பிரசாந்த் மற்றும் பிரதீப் திவேதி ஆகிய இருவரும் விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தனர். அவர்கள் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இத்தகைய ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
சாலையில் செல்லும் போது பிற வாகன ஓட்டிகளுக்கும், உங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டாதீர்கள். ஒரு நொடி கவனக்குறைவு மற்றும் தேவையற்ற வேகம் ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே அழித்துவிடும்” எனப் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





