கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து தாமதமாக வந்ததால் அவதிப்பட்ட பயணி ஒருவர், போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் நேரடியாக முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துறையூருக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த பயணி ஒருவர், நீண்ட நேரமாக பேருந்து வராததுடன், தாமதம் குறித்து எந்தவித அறிவிப்பும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இதனால் கடும் அதிருப்தியடைந்த அவர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் தனது வேதனையை தெரிவித்தார்.
அப்போது, பயணி கேட்ட கேள்விக்கு அமைச்சர், “நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் இன்னும் சாப்பிடல” என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. இந்த பதில் அங்கிருந்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே அது வைரலாக பரவி, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலர் அமைச்சர் பேச்சை விமர்சித்துள்ள நிலையில், சிலர் சூழ்நிலையை தவறாக புரிந்துகொண்டதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பேருந்து தாமதம், பயணிகள் தகவல் மையத்தின் செயல்பாடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வசதிகள் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்களா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





