கிழக்கு கடற்கரையில் அத்துமீறல்… திருமணம் செய்வதாக ஏமாற்றி கருக்கலைப்பு… நடிகர் மீது கமிஷனரிடம் மனு

0
3

திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியாக இருந்தபோதே ஏமாற்றி பாலியல் உறவு வைத்து, இருமுறை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக நடிகர் ஒருவர் மீது கேரளாவை சேர்ந்த இளம் நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த 19 வயதான நடிகை ஐஸ்வர்யா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த மனுவில், கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான ‘ஜெஸ்ஸி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது, அப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமான ஆபிரகாம் ஜோஸ்வாவுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியதாகவும், தனக்கு அப்போது 17 வயது மட்டுமே இருந்தபோதும் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து நெருக்கமாக பழகியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓய்வு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பலமுறை உடலுறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இருமுறை கர்ப்பம் ஏற்பட்டதாகவும், முதல் முறை கருக்கலைப்பு மாத்திரைகள் மூலம் கர்ப்பம் கலைக்கப்பட்டதாகவும், இரண்டாவது முறை கர்ப்பமாகியபோது கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தன்னிடம் முறையான சம்மதம் பெறாமல் கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், திருமணம் செய்து கொள்வதாக கூறி பணமும் பெற்றுக் கொண்ட பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது புகார் அளித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தனக்கு காவல் பாதுகாப்பு வழங்குவதுடன், சம்பந்தப்பட்ட நடிகர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.