காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் பட்டம் பறக்கவிட்டுக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செவிலிமேடு மேற்கு மாட வீதியைச் சேர்ந்த ஆனந்தனின் மகன் கார்த்தி, அங்குள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தான். தற்போது கோடை விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த சிறுவன், நேற்று தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று பட்டம் பறக்கவிட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பட்டம் பறக்கவிடும் ஆர்வத்தில் கவனக்குறைவாக இருந்த சிறுவன் திடீரென மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தான். இதில் அவரது தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கோடை விடுமுறையில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.





