புளியமரக்கிளை முறிந்து மின் கம்பங்கள் சேதம்

0
5

கூவத்தூர் அருகே கடலூர் ஊராட்சியில் பழமையான புளியமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்து, அப்பகுதியில் இரண்டு நாட்கள் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த கடலூர் ஊராட்சிப் பகுதியில் 11 கே.வி. உயரழுத்த மின்தடம் செல்கிறது. இந்த மின்தடம் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே மின்தட பாதையில் பழமையான புளியமரம் ஒன்று இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் அந்த மரத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மரத்தின் ஒரு பகுதி தீக்கிரையாகி பலவீனமடைந்த நிலையில் இருந்தது. இருப்பினும், மரத்தை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பலவீனமடைந்த மரத்தின் பெரிய கிளை திடீரென முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தது. இதில் இரண்டு மின் கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் மின்விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளானனர். பின்னர் கூவத்தூர் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மின்விநியோகம் மீண்டும் சீரமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.