சென்னை திருமங்கலம், ஆலங்குளம் மற்றும் மயிலாப்பூர் தொகுதிகளில் சட்டசபை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அறப்போர் இயக்கம் மனு அளித்துள்ளது.
அந்த இயக்கம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 3 நாட்களில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோ வெளிவந்துள்ளன. ஆலங்குளம் அதிமுக வேட்பாளர் பிரபாரன், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க சொல்வது வீடியோவில் தெளிவாக உள்ளது.
இரண்டாவதாக, மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த வேலுவிற்கு நெருக்கமான சத்தியமூர்த்தி வீட்டில் சோதனை நடந்த சோதனையில் 79 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பணம் விநியோகம் செய்ததற்கான ஆதாரம் மற்றும் வீடியோ தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது.
மூன்றாவதாக, மதுரையில் திமுக நிர்வாகி செல்லப்பாண்டியன் என்பவரின் மகள், திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் மணிமாறனுக்கு ஆதரவாக ஆயிரம் ரூபாய் விநியோகம் செய்தது குறித்து பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுதும் ஏராளமான பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க தேர்தல் கமிஷன் குறைந்தளவு நடவடிக்கை மட்டுமே எடுத்தது. இந்நேரத்தில் ஆதாரம் வெளிவந்துள்ள நிலையில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியம்.
மேற்கண்ட தொகுதிகளில், தேர்தலை தொடர்ந்து நடத்துவது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை தடம்புரள செய்துவிடும். எனவே ஆலங்குளம், மயிலாப்பூர் மற்றும் திருமங்கலம் தொகுதிகளில் சட்டசபை தேர்தல் ரத்து செய்ய வேண்டும்
பண விநியோகத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் விநியோகம் தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடுத்து அவர்களுக்கு சிறை தண்டனை பெற்று தருவதுடன், தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





