சென்னை – செங்கல்பட்டு புறநகர் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 1, 2026 முதல் சென்னை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய ரயில் அட்டவணை அமலுக்கு வர உள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், அதிக நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும், ரயில் சேவைகளை நேர்த்தியாக ஒழுங்குபடுத்தவும் இந்த புதிய அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய அட்டவணையின்படி, வார நாட்களில் (திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை) மொத்தம் 106 புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 96 ரயில் சேவைகள் இயக்கப்படும்.
பயணிகள் அதிகளவில் பயன்படுத்தும் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் முதல் ரயில் அதிகாலை 3:50 மணிக்கு சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து புறப்படுகிறது. தாம்பரம் நிலையத்திலிருந்து அதிகாலை 3:55 மணிக்கு சேவை தொடங்குகிறது. இரவு மற்றும் நள்ளிரவு பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, சேவைகள் நள்ளிரவு 12:50 மணி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அட்டவணை மூலம் அலுவலகம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் சார்ந்த பயணங்களை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய நேர அட்டவணை தொடர்பான முழு விவரங்களை ரயில்வே நிலைய அறிவிப்பு பலகைகள், அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் பயணிகள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது





