தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பசியாற்றும் முக்கிய நலத்திட்டமாக விளங்கி வரும் ‘அம்மா உணவகங்களை’ முழுமையாக புதுப்பிக்க முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீப காலமாக அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்ற புகார்கள் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தொடங்கப்பட்ட அம்மா உணவக திட்டம், குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் மக்கள் நலத் திட்டமாக பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரு ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம், மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம் வழங்கப்பட்ட இந்த திட்டம் நகர்ப்புற ஏழை மக்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது.
இந்த திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களும் இதேபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தின. கடந்த 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் அரசியல் வேறுபாடுகளை கடந்து அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது சென்னை மாநகராட்சியின் கீழ் 383 அம்மா உணவகங்களும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மூலம் 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், சமீபத்தில் பல இடங்களில் உணவின் தரம் குறித்த புகார்கள் எழுந்தன.
இதையடுத்து முதலமைச்சர் விஜய், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அம்மா உணவகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், புதிய சமையல் உபகரணங்களை உடனடியாக வாங்கவும், தரமான மற்றும் சுவையான உணவுகளை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த மறுசீரமைப்பு மற்றும் பொருட்கள் கொள்முதல் பணிகளுக்கான செலவுகளை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
