பெருங்களத்தூரில் IT ஊழியர் வீட்டில் வைர நெக்லஸ் திருட்டு

0
6

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் பகுதியில் சுற்றுலா சென்றிருந்த மென்பொறியாளர் தம்பதியின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய பெருங்களத்தூர் கே.வி.டி கிரீன் சிட்டியை சேர்ந்த மார்கஸ் என்பவர் பெங்களூருவில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜனனி (36), வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த மே 24ஆம் தேதி, தம்பதியினர் குடும்பத்துடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

அடுத்த நாள் வீட்டில் வேலை செய்யும் பெண் வழக்கம்போல் வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக வீட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வீடு திரும்பிய மார்கஸ் மற்றும் ஜனனி, வீட்டினுள் சென்று பார்த்தபோது அலமாரிகள் திறந்து கிடந்தன. தொடர்ந்து சோதனை செய்ததில், 8 சவரன் தங்க நகைகள், இரண்டு வைர நெக்லஸ்கள் மற்றும் ஒரு மடிக்கணினி ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.