சித்தூர் ஏரியில் மண் கொள்ளை புகார்.. கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

0
5

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவில் உள்ள சித்தூர் ஏரியில் நடைபெற்று வரும் சட்டவிரோத மண் எடுப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமுளி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் Malathi Helen அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.

கிராம மக்கள் அளித்த மனுவில், கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கனிம வளத்துறை சார்பில் தனியார் நிறுவனத்திற்கு சாலைப் பணிகளுக்காக ஏரி மண் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதிக்கப்பட்ட 3 அடி அளவை மீறி, 20 அடிக்கும் மேல் ஆழமாக மண் எடுக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தினமும் 100க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் மண் கடத்தப்படுவதாகவும், இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மண் கொள்ளையை தடுக்க முயன்ற பொதுமக்களை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மூலம் மிரட்டுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். புத்திரன்கோட்டை – சித்தூர் சாலை வழியாக மண் லாரிகள் சென்றதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது குமுளி, பிலாங்குப்பம், பிச்சந்தாங்கல், ஈசூர் மற்றும் அரசூர் வழியாக லாரிகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக எடையுடன் செல்லும் லாரிகளால் கிராம சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணித்து வருவதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் உத்தரவிட்டுள்ளார்.