தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த முக்கியக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மற்ற நிர்வாகிகள் அல்லது ஆதரவாளர்களுக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகப்போகும் இந்த இக்கட்டான தருணத்தில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விஜய் அறிவுரைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தின் மிக முக்கியமான அங்கமாக, தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது தொகுதியில் பெறப்பட்ட 17D ஒரிஜினல் படிவங்களைத் (17D Original Forms) தலைமை அலுவலகத்தில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த படிவங்கள் வாக்குப்பதிவு நிலவரங்களைச் சரிபார்க்கவும், வாக்கு எண்ணிக்கையின் போது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஆன்மீகப் பயணத்தில் இருந்த விஜய், தற்போது நேரடியாகக் களத்தில் இறங்கி வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவது தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸிட் போல் முடிவுகள் பலவாறாக இருக்கும் நிலையில், கட்சியின் அதிகாரப்பூர்வத் தரவுகளைக் கொண்டு உண்மை நிலவரத்தை ஆய்வு செய்ய இந்த 17D படிவங்கள் விஜய்க்கு உதவும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





