பெங்களூருவில் சோகம்: பவுரிங் மருத்துவமனை சுவர் இடிந்து பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு!

0
1

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நேற்று பெய்த அதீதப் பேய் மழையின் காரணமாக ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 8-ஆக உயர்ந்துள்ளது. நகரின் முக்கியப் பகுதியான சிவாஜிநகரில் அமைந்துள்ள பவுரிங் (Bowring) அரசு மருத்துவமனை வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று மாலை பெய்த கனமழையின் போது, பழமையான அந்த மருத்துவமனை சுவர் திடீரென இடிந்து விழுந்தது. முதற்கட்டத் தகவலின்படி 7 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மேலும் 8 பேருக்குத் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்தை நேற்று நேரில் பார்வையிட்ட முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற பலவீனமான நிலையில் உள்ள பழைய சுவர்களை உடனடியாகக் கண்டறிந்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த மழை விபத்து ஒட்டுமொத்த பெங்களூரு நகரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.