திண்டுக்கல் மாவட்டம் மலைப்பகுதிகளில் சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை குதிரை மூலம் எடுத்துச் சென்ற சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மொத்தம் 339 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 121 வாக்குச்சாவடிகள் மலைப்பகுதிகளில் உள்ளன. மொத்தம் 2,37,359 வாக்காளர்கள் உள்ளனர்.
பழநி தேர்தல் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்கள் புதன்கிழமை அனுப்பப்பட்டன. ஆனால் வெள்ளகெவி, சின்னூர், பெரியூர் போன்ற கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால், குதிரை மூலம் இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
இந்தப் பகுதிகள் பாதுகாப்பு ரீதியாக முக்கியமானவை என்பதால் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினரும் உடன் சென்றனர். வட்டக்கானல் வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து 8 கி.மீ. தூரம் கடினமான பாதையில் நடந்து சென்று வாக்குச்சாவடிகளை அடைந்தனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் இயந்திரங்கள் திண்டுக்கல் எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.





