போர் நின்றாலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏன் நீடிக்கும்?

0
8

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள ஈரான் தொடர்பான பதற்ற நிலை, உலகளாவிய எரிசக்தி சந்தையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் தற்காலிகமாக தணிந்தாலும் கூட, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு உடனடியாக குறையாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நிலைக்கு முக்கிய காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல்கள் கூறப்படுகின்றன. உலகின் கடல்வழி கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் சுமார் 25 சதவீதம் இந்த பாதை வழியாக நடைபெறுகிறது. போர் காரணமாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தாமதமடைந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய், இறக்குமதி நாடுகளுக்கு சென்றடைய பொதுவாக ஒரு மாதம் வரை ஆகும். சமீப வாரங்களில் ஏற்பட்ட தடைகள் காரணமாக அதன் விளைவுகள் அடுத்த மாதங்களில் தீவிரமாக தெரியும் என்று சர்வதேச எரிசக்தி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சேதமடைந்த உற்பத்தி நிலையங்களை சீரமைக்கவும், கடல்வழிப் பாதைகளை பாதுகாப்பாக மாற்றவும் கூடுதல் காலம் தேவைப்படுகிறது.

இதேவேளை, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) சந்தையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கத்தார் போன்ற முக்கிய ஏற்றுமதி நாடுகளில் விநியோகம் குறைந்ததால், எரிவாயு விலை இரட்டிப்பு அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் மின் உற்பத்தி மற்றும் உர தொழிற்துறைகளில் நேரடியாக உணரப்படுகிறது.

எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக பல வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார அழுத்தம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் போன்ற நாடுகள் கடும் மின்வெட்டினை எதிர்கொண்டு வருகின்றன. இந்தியாவும் அதிக விலையில் எரிபொருள் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எரிசக்தி வழங்க முன்வந்தாலும், உலகளாவிய தேவையை உடனடியாக பூர்த்தி செய்வது சாத்தியமற்றதாக கருதப்படுகிறது. எனவே, ஈரான் மோதலின் விளைவுகள் நீண்டகாலம் தொடரும் என்பதே தற்போதைய நிலைமை.