செங்கல்பட்டு: முதலிடம் பிடித்த மாணவிக்கு பாஜக பாராட்டு!

0
5

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

செங்கல்பட்டு அருகே காயரம்பேடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சனி என்ற மாணவி, இந்தாண்டு நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சிறப்பான கல்வி சாதனை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட செயலாளர் கலாராணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ரஞ்சனியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை பாராட்டினர். மாணவிக்கு சால்வை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், தொடர்ந்து உயர்கல்வியில் சிறந்து விளங்கி மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வாழ்த்தினர். மாணவியின் பெற்றோர்களையும் சந்தித்து, மகளின் சாதனைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

ரஞ்சனியின் இந்த சாதனை காயரம்பேடு பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.