வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய பெண் சிறுத்தை பூனையை தேடும் பணி இரண்டாவது நாளாகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஒரு ஜோடி சிறுத்தை பூனைகள் வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. அவை மே 4ஆம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக கரடி கூண்டு எதிரே உள்ள தனி கூண்டில் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், கூண்டின் மேற்பகுதியில் இருந்த சிறிய ஓட்டை வழியாக பெண் சிறுத்தை பூனை தப்பித்து அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூண்டை முழுமையாக ஆய்வு செய்யாததே இந்த சம்பவத்திற்குக் காரணம் என கூறப்படுகிறது.
இதையடுத்து, பூங்கா ஊழியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து சிறுத்தை பூனையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தப்பிச் சென்ற பகுதிகளில் 12 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நான்கு இடங்களில் கூண்டுகள் அமைத்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இரண்டு வனச்சரகர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், விலங்கை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





