மாடம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை கிடங்கை முழுமையாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tambaram City Municipal Corporation 5வது மண்டலத்தில் உள்ள கிழக்கு தாம்பரம் பகுதிகளிலும், 3வது மண்டல செம்பாக்கம் பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மாடம்பாக்கம் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் தினமும் பல டன் குப்பைகள் அங்கு தேங்கி, மலைபோல் குவிந்துள்ளன.
குப்பை தேக்கத்தால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், கரும்புகை சூழ்ந்து சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
தீ விபத்து ஏற்படும் ஒவ்வொரு முறையும் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்க வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் மாநகராட்சிக்கும் கூடுதல் செலவு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, குப்பை கிடங்கை அகற்றி மாற்று தீர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





