வண்டலூரில் ஜமாபந்தி: 157 மனுக்கள் பெற்ற ஆட்சியர்; 3 பேருக்கு உடனடி பட்டா வழங்கல்

0
4

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் மு. வீரப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 157 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, வண்டலூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், பல்லாவரம், செய்யூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் 1435 பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் மற்றும் கிராம கணக்குகள் தணிக்கை பணிகள் ஜூன் 9 முதல் ஜூன் 25 வரை நடைபெற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி வண்டலூர் குறுவட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் இலவச வீட்டுமனை பட்டா, முழுபுலம் பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு, பட்டா மாற்றம், நில அளவு திருத்தம், ஆக்கிரமிப்பு புகார்கள், பல்வேறு சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை மற்றும் பிற துறை சார்ந்த கோரிக்கைகள் உள்ளிட்ட 157 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், ஜமாபந்தி நிகழ்ச்சியிலேயே மனு அளித்த மூன்று பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரடியாக பட்டாக்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் சௌ. தியாகராஜன், துணை ஆட்சியர் (பயிற்சி) மணியரசன், வட்டாட்சியர்கள் ராதா மற்றும் பூங்கொடி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.