நாசிக் டிசிஎஸ் பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் மற்றும் டிஜிட்டல் சித்ரவதை விவகாரத்தில், கைதானவர்கள் அளித்த திடுக்கிடும் வாக்குமூலத்தைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) கிளை அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்கள், பாலியல் வன்கொடுமை மற்றும் மதமாற்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் தற்போது டிஜிட்டல் தளங்களிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் கைதான 7 முக்கிய நபர்கள், சமூக வலைதளங்கள் மூலம் பெண் ஊழியர்களுக்குப் பயங்கரமான தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.
நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்களைக் குறிவைத்து, முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-அப் ஆகிய தளங்கள் வாயிலாகத் தேவையற்ற குறுஞ்செய்திகள் மற்றும் ஆபாச வீடியோக்களை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகக் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அனுப்பப்பட்ட சர்ச்சைக்கிரிய உரையாடல்கள் மற்றும் வீடியோக்களைக் காவல் துறையினர் தற்போது ஆதாரங்களாகச் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகளின் செல்போன்களில் இருந்து பல முக்கியத் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் அந்தத் தரவுகளை மீட்கும் (Data Recovery) பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தற்போது அதிரடியாகக் களம் இறங்கியுள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிர மாநில காவல் துறை மற்றும் டிசிஎஸ் நிறுவன உயர் அதிகாரிகளுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழுமையான அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் பெண்களுக்கு எதிராக நிகழும் இத்தகைய வன்கொடுமைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.





