அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட எஸ்பி வேலுமணி கோரிக்கை!

0
3

தோல்விக்கான காரணங்களை ஆராய வலியுறுத்தல்; கட்சியை வலுப்படுத்த விவாதம் தேவை எனப் பேட்டி!
சென்னை, மே 15: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக-வில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று மிக முக்கியமான கருத்தைப் பகிர்ந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமைக்குத் தனது ஆதரவை உறுதிப்படுத்திய அதே வேளையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

“அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அவரைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கமல்ல. ஆனால், கட்சி இப்போது இருக்கும் நிலையில் சில அதிரடி மாற்றங்களும், மறுசீரமைப்பும் அவசியம்,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

தொடர் தோல்விகள் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய வேலுமணி, “தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பது குறித்து நாம் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். எனவே, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, கட்சியின் எதிர்காலக் கட்டமைப்பு குறித்து ஆலோசிக்க வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கோரிக்கை,” எனத் தெரிவித்தார்.

அதிமுக ஒரு வலிமையான இயக்கம் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், “எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா கட்டிக்காத்த இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவதே எங்களின் லட்சியம். இதற்காகத் தான் நாங்கள் ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இதில் பிரிவினைக்கு இடமில்லை,” என்று கூறினார்.

சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான ஒரு தரப்பு எம்.எல்.ஏ.-க்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், வேலுமணியின் இந்த விளக்கம் அதிமுக வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி 26 மாவட்டச் செயலாளர்களை நீக்கியுள்ள சூழலில், ‘சமரசம்’ அல்லது ‘மறுசீரமைப்பு’ என்ற கோணத்தில் வேலுமணி முன்வைத்துள்ள இந்தப் பொதுக்குழு கோரிக்கை இபிஎஸ் தரப்பிற்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.