“பாலிவுட்டில் மரியாதை இல்லை” – நடிகை சிம்ரன் வேதனை

0
1

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான Simran, பாலிவுட் திரைப்பட உலகின் அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

இதற்கு முன்பு Dulquer Salmaan உள்ளிட்ட பல தென்னிந்திய நடிகர்களும் பாலிவுட் படப்பிடிப்பு தளங்களில் உரிய மரியாதை கிடைப்பதில்லை என்று தெரிவித்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது சிம்ரனும் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், “தென்னிந்திய நடிகர்களின் பல ஆண்டுகால உழைப்பையும், அவர்கள் உருவாக்கிய நற்பெயரையும் பாலிவுட் தரப்பு மதிப்பதில்லை. என் வாழ்க்கையின் பெரும்பகுதியை சினிமாவுக்காக அர்ப்பணித்துள்ளேன். ஆனால் அங்கு அடிப்படை மரியாதை கூட கிடைக்காதது வேதனை அளிக்கிறது,” என்றார்.

மேலும், பாலிவுட் தயாரிப்பாளர்கள் தங்கும் வசதி, விமான டிக்கெட் மற்றும் உதவியாளர்கள் தொடர்பிலும் கட்டுப்பாடுகள் விதிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். “எத்தனை உதவியாளர்களை அழைத்து வரலாம் என்பதிலும் பேரம் பேசுகிறார்கள். அடிப்படை வசதிகளிலும் கஞ்சத்தனம் காட்டுகின்றனர். இதனால்தான் பல இந்தி திரைப்பட வாய்ப்புகளை நான் நிராகரித்தேன்,” என்றும் சிம்ரன் தெரிவித்தார்.

சிம்ரனின் இந்த கருத்து தென்னிந்திய மற்றும் இந்தி திரையுலகங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடுகள் குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.