சோழிங்கநல்லூர்: மது போதையில் இருந்தவரை தாக்கி ஐபோன் பறிப்பு

0
1

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தமிழ்ச்செல்வன் (26) என்பவர் மீது தாக்குதல் நடத்தி, அவரது ஐபோன் மற்றும் ரூ.50,000 பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தெரிவித்ததாவது: தமிழ்ச்செல்வன், ஓ.எம்.ஆர் குமரன் நகர் பகுதியில் உள்ள நண்பர்களுடன் இரவு நேரத்தில் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், தமிழ்ச்செல்வனை திடீரென தாக்கியுள்ளனர். தாக்குதலில் அவர் காயமடைந்த நிலையில், அவரிடம் இருந்த விலையுயர்ந்த ஐபோன் மற்றும் ரூ.50,000 ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது.

இதையடுத்து தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில், சோழிங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் உள்ளூர் தகவல்களின் அடிப்படையில் போலீசார் தேடுதல் நடத்தியதில், சம்பவத்தில் தொடர்புடைய சசிகுமார் மற்றும் ஜெகன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபரை தேடி தனிப்படை அமைத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் ஓ.எம்.ஆர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் இரவு நேர பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, மதுபோதையில் இருப்பவர்களை குறிவைத்து நடைபெறும் கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இரவு நேரங்களில் காவல் துறை ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றும், முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.